உளுத்தம்பருப்பு சாதம்/கருப்பு உளுந்து சாதம்
தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி : 1 கப்
கருப்பு உளுந்தம் பருப்பு : 1/4 கப்
வெந்தயம் : 1 தேக்கரண்டி
பூண்டு பற்கள் : 4-5
தேங்காய்த்துருவல் : 1/2 கப்
தண்ணீர் : 3.5 - 4 கப்
நல்லெண்ணெய் : 2 டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
செய்முறை :
ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும், கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, பருப்பு, வெந்தயம், பூண்டு, தேங்காய் துருவல், உப்பு, மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து, மேலும் 3.5 - 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
குக்கரை மூடி வைத்து 3 - 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான உளுத்தம் பருப்பு சாதம் தயார்.
குறிப்புகள் :
இந்த சாதம் தயாரிப்பதற்கு, உடைத்த கருப்பு உளுந்து தான் உபயோகிப்பார்கள். ஆனால், தோல் நீக்கப்பட்ட வெள்ளை உளுந்திலும் தயாரிக்கலாம்.
இந்த சாதத்தோடு நல்ல எண்ணெய் சேர்த்து எள்ளு தொகையல் சேர்த்து பரிமாறுவார்கள்.
எங்கள் வீட்டில் இந்த சாதத்தோடு கொஞ்சம் நல்ல எண்ணெய் ஊற்றி, கருப்பட்டி தொட்டும் சாப்பிடுவோம்..
இதனோடு எள்ளு தொகையல், தேங்காய் தொகையல், அவியல், வத்தல்/வடகம் மற்றும் சில நேரங்களில் கீரை பொரியல் வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
இதுவும் ஒரு திருநெல்வேலி ஸ்பெஷல் ரெசிபி..
No comments:
Post a Comment