தேவையான பொருள்கள் :
பொட்டுக்கடலை/பொரிகடலை : 1 கப்
சர்க்கரை : 3/4 கப்
நெய் : 1/2 கப்
ஏலக்காய் : 2
உடைத்த முந்திரி பருப்புகள் : 10 to 15
செய்முறை :
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் இந்த மாவினை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே மிக்ஸி ஜாரில், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்.
பின்னர் சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை மாவினை கலந்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து, அதில் உடைத்து வைத்துள்ள முந்திரிகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மீதமிருக்கும் நெய்யை வாணலியில் சேர்த்து நன்றாக உறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் இந்த சூடான உருக்கிய நெய்யை, மாவு மற்றும் சர்க்கரைக் கலவையோடு வறுத்து முந்திரிப்பருப்புகளையும் சேர்த்து ஒரு கரண்டி வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கை பொறுக்கும் சூட்டிற்கு மாவு வந்தவுடன், வேகமாக லட்டுகளை பிடித்து ஒரு 5 நிமிடங்கள் வைத்தால், சுவையான நெய் உருண்டைகள் தயார்..
குறிப்புகள் :
திருநெல்வேலியில் மொத்தமாக பொட்டுக்கடலை, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து மில்லில் / மெஷினில் அரைத்து வைத்திருப்பார்கள். தேவையான பொழுது, நெய் மட்டும் சேர்த்தால், உருண்டைகள் தயார் ஆகிவிடும். இந்த மாவு 3 - 6 மாதங்கள் வரைக்கும் வைத்து பயன்படுத்தலாம்.
நெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும். நெய்யினுடைய சூட்டில், சர்க்கரை இளகி, மாவானது லட்டுகள் பிடிக்க திரண்டு வரும்.
பொட்டுக்கடலைக்கு பதிலாக, பாசிப்பருப்பை வறுத்து பொடித்தோ/ வறுத்த கடலை மாவிலோ / வறுத்த கோதுமை மாவிலோ தயாரிக்கலாம்.
சர்க்கரைக்கு பதிலாக, வெல்லம்/ கருப்பட்டி சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
நெய் அதிகமாக சேர்த்தால், லட்டுகள் பிடிக்க எளிதாக வரும், ஆனால் லட்டுகள் கெட்டியாக (firm ) இருக்காது.
அதே சமயத்தில், குறைவாக நெய் சேர்த்தாலும் லட்டுகள் பிடிக்க இயலாது. மாவு உதிர்ந்து விடும். ஆகையால், நெய்யினை பார்த்து அளவாக அதே சமயத்தில் சூடாகவும் சேர்க்க வேண்டும்.
இனிப்பு சற்று அதிகமாக தேவைப்படுபவர்கள் 1 கப் சர்க்கரை வரை சேர்த்துக் கொள்ளலாம்.
திருநெல்வேலியில், இதனை நெய் உருண்டை/ பொரிகடலை லட்டு என்றும் மற்ற இடங்களில் மாலாடு என்றும் அழைப்பது வழக்கம்.
No comments:
Post a Comment